சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் கைதான காதலன் மீது குண்டாஸ்
ஈரோடு, ஈரோட்டில் சிறுமியை நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோவில் கைதான காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன், 21, கூலி தொழிலாளி. ஈரோடு பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்தார். ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த மே, 2ல், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே, பயன்பாடற்ற கட்டடத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.
அப்போது அவரது நண்பர்களான ஈரோடு, மணல்மேடு வடிவேல் மகன் சந்தோஷ், 25; ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன், 25, மனோகரன் மகன் ரஞ்சித், 23; அவல்பூந்துறை பாரதி வீதி குகன், 23, ஆகியோர் வந்து, கிருஷ்ணனுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, துன்புறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். கிருஷ்ணன், சந்தோஷ், மணிகண்டன், குகன், ரஞ்சித் என ஐந்து பேரையும், போக்சோ வழக்கில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கூட்டு பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த கிருஷ்ணனை, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க, எஸ்.பி., சுஜாதா, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றுக்கொண்டதால், கிருஷ்ணன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.