கணவர் பலியான விபத்து மனைவியும் உயிரிழப்பு

ஆவடி:திருநின்றவூர், வினோபா நகரைச் சேர்ந்தவர் நரேஷ் பாபு, 35; கட்டட ஒப்பந்ததாரர். இவரது மனைவி சாருமதி, 33. இவர்களது மகள் ஆஸ்மிகா, 2.
செங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள், 'யமஹா எப் இசட்' பைக்கில், நேற்று முன்தினம் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், ஆவடி, வீராபுரம் முருகன் கோவில் அருகே செல்லும்போது, நிலைத்தடுமாறி முன்னால் சென்ற ஈச்சர் லாரியில், நரேஷ் பாபுவின் பைக் மோதி உள்ளது. இதில், லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே நரேஷ் பாபு உயிரிழந்தார். சாருமதி மற்றும் மகள் ஆஸ்மிகா பலத்த காயமடைந்தனர்.
பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட சாருமதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி ஆஸ்மிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து தொடர்பாக, நாமக்கல், ராசிபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சுப்பிரமணி, 64, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.