படவேட்டம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி 15 வது வார்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிவுற்று இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜை நடந்தது. இதில், தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாகசாலை பூஜையை துவக்கி வைத்தார்.
படவேட்டம்மன் கோவில் கருவறை சென்று மூலவர் சிலைகளுக்கு தகடு பதித்தார். கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
நேற்று காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, சிறப்பு யாகம் நடந்தது.
இன்று அதிகாலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையுடன், காலை 8:30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:30 மணிக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.