5 ஆண்டாக நடக்கும் கட்டுமான பணி திறப்பு விழா கல்வெட்டால் அதிர்ச்சி

வெங்கத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகரில் உள்ள ஊராட்சி அலுவலகம் சேதமடைந்து, மோசமான நிலையில் இருந்தது.

இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, 2020 ஜனவரி மாதம் துவங்கி நடந்து வருகிறது.

மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக ஒன்றிய பொறியாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால், பணிகள் துவங்கி ஐந்து ஆண்டுகளாகியும், தற்போது வரை ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் ஊராட்சி அலுவலக நுழைவாயில் பகுதியில், கடந்த ஜனவரி 1ம் தேதி காலை 10:00 மணிக்கு திறப்பு விழா நடத்தப்பட்டதாக கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது, பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, வெங்கத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெங்கத்துார் ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி இன்னும் நிறைவடையவில்லை. கல்வெட்டு அமைக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றிய அலுவலர்,

கடம்பத்துார்.

Advertisement