நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த தவறிய தலைமை செயலர்கள் மீது அவமதிப்பு வழக்கு

1

சென்னை: கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தவறிய, அரசு தலைமை செயலர்களுக்கு எதிராக, தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.

கோவை, சேலம் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழக அரசு குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளான நித்யா, கார்த்திகேயன், அஜித்குமார் மற்றும் அன்பரசன் ஆகியோர், தங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி அளித்த மனுக்களை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2020ல் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கவும், அதற்கு ஏற்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்யவும், ஒரு குழு அமைக்க வேண்டும். குழுவிடம் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை பெற்று, எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, 2023 செப்., 19ல் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, இந்த நான்கு பேர் தொடர்ந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிடும்படி, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, தலைமை செயலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த நீதிமன்றம், 2023 செப்., 19ல் பிறப்பித்த உத்தரவின்படி, இந்தப் பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் ஆராய, ஒரு குழு அமைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. இதை பார்க்கும்போது, நீதிமன்ற உத்தரவை, தலைமை செயலர் பின்பற்றத் தவறி விட்டார் என்பதற்கான முகாந்திரம் உள்ளது.

நீதிமன்ற உத்தரவை அவமதித்த, தலைமை செயலரின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது. தற்போதைய பிரச்னை, பல அதிகாரிகளின் சோம்பல் மனப்பான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மாநில நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தலைமை செயலரே, நீதிமன்ற உத்தரவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும்போது, அவருக்கு கீழுள்ள அதிகாரிகள், அதை அமல்படுத்துவர் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்? நீதிக்காக நீதிமன்றத்தை அணுகும் சாமானியர்கள் மற்றும் ஏழை மக்கள் மீது, அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்த நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்த பின்னும், நீதியின் பலனை அனுபவிக்க முடியாத நிலையில், வழக்கு தொடுத்தவர்கள் உள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் தலைமை செயலருக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்படுகிறது. இது, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல், துணிச்சலுடன் செயல்படும் அதிகாரிகளுக்கான செய்தியாக இருக்கும்.

எனவே, 2023 செப்., 19 முதல் இன்றுவரை தலைமை செயலராக பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளின் விபரங்களையும் பெற்று, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்ட விதிகளின்கீழ் அவமதிப்பு வழக்கை, உயர் நீதிமன்ற பதிவாளர் பதிவு செய்ய வேண்டும். அடுத்த விசாரணையின்போது, அவர்கள் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

***

Advertisement