பைக் சிறார்களுக்கு அபராதம் பெற்றோர் மீது வழக்கு இல்லை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், பைக்கில் சுற்றித்திரிந்த, 15 சிறுவர்களுக்கு, மொத்தம், 15,000 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதியாமல், எச்சரிக்கை மட்டும் விடுத்தனர்.

'சிறுவர்கள் டூ - வீலர் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்களின் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து, மூன்றாண்டு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.

எனினும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அவ்வாறு செய்யவில்லை. கடந்த சில வாரங்களாக போக்குவரத்து எஸ்.ஐ., ஜோதி பிரசாத் தலைமையிலான டிராபிக் போலீசார், சோதனை மேற்கொண்டனர். இதில், நகரில் அதிவேகமாக பைக்கில் சுற்றித்திரிந்த, 15 சிறுவர்களை பிடித்தனர்.

அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் மொத்தம், 15,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இனிமேல் சிறார்கள் பிடிபட்டால், அவர்களின் பெற்றோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement