ஸ்டாலின் சொல்லும் பொய்யை ராகுல்கூட நம்பமாட்டார்: முருகன் சொல்கிறார்

சென்னை: மத்திய அமைச்சர் முருகன் அறிக்கை:

2027ல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது முதலே, முதல்வர் ஸ்டாலின் துாக்கத்தை தொலைத்து தவிக்கிறார்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில், இல்லாத பூதத்தை உருவாக்க, பகீரத பிரயத்தனம் செய்கிறார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை, 2027க்கு தள்ளிப்போட்டு, லோக்சபாவில் தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க, பா.ஜ., சதி செய்வதாக ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய் சொல்வது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

மக்கள் தொகை வெகுவாக வளர்ந்து விட்டதால், கண்டிப்பாக லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பது, மத்திய அரசின் நிலைப்பாடு. எனினும், அது எப்போது நடக்கப் போகிறது; எந்த அடிப்படையில் நடக்க போகிறது என்று எதுவும் அறிவிக்கவில்லை. அதற்கு முன்பாகவே, தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று, ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என பார்லிமென்டில் பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் வந்தபோதும் தெளிவுபடுத்தினார். ஆனால், ஸ்டாலின் தவறான தகவலை தெரிவித்து, மக்களை திசை திருப்பும் அரசியலை தொடர்ந்து செய்கிறார்.

தொகுதி மறுவரையறை பற்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசவில்லை. இந்த விவகாரத்தில், தென்மாநில முதல்வர்களின் கூட்டம் என, பிசுபிசுத்த கூட்டத்தை நடத்திய தி.மு.க., இதற்காக டில்லியில், 'இண்டி' கூட்டணி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை? அந்த கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறையில் தங்கள் நிலைப்பாட்டை, ராகுலை வைத்து, அறிவிக்க வேண்டியது தானே.

ஸ்டாலினால் இதை செய்ய முடியாது. ஏனெனில், 'இண்டி' கூட்டணி தலைவர்களே தி.மு.க.,வின் கட்டுக்கதையை நம்புவதற்கு தயாராக இல்லை. இது தெரிந்துதான் அறிக்கை மேல் அறிக்கைவிட்டு, பல்லவி பாடிக்கொண்டு இருக்கிறார், ஸ்டாலின்.

முதல்வரின் பொய் பிரசாரத்தை ராகுல் உட்பட, 'இண்டி' கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை.

தமிழக மக்கள் எப்படி நம்புவர்? 2027ல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா? தொகுதி மறுவரையறை பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பே, பூச்சாண்டி கிளப்புவதை விட்டுவிட்டு, நிர்வாக சீர்குலைவில் இருந்து, தமிழக அரசை காப்பாற்ற ஸ்டாலின் ஏதாவது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

'தமிழக மக்கள் வேதனை'

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், 'வரும் 22ம் தேதி, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு, பா.ஜ., மற்றும் சங் பரிவார் நடத்தும் நிகழ்ச்சி கிடையாது. முருக பக்தர்கள் அனைவரும் இணைந்து நடத்துகின்றனர். கந்த சஷ்டி யாத்திரையை எவ்வாறு இழிவுபடுத்தினரோ, அதைப்போல் இந்த மாநாடு குறித்தும் சிலர் பேசி வருகின்றனர். தமிழகத்தில் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். இதனால், தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர்' என்றார்.

Advertisement