அரசு டாக்டர் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது

நாகர்கோவில்:அரசு டாக்டர் வேலை வாங்கித்தருவதாகக்கூறி கன்னியாகுமரி ஆசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த வேலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காங்கரையைச் சேர்ந்தவர் சோமன் நாயர் 58. பள்ளி ஆசிரியர். இவரது மகள் சேலம் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். சமீபத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதியிருந்தார். சோமன் நாயர் , ஜன., 7 ல் சென்னை தேர்வாணைய அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது வேலுார் மாவட்டம் கே. வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் 'தேர்வாணைய தலைவரின் டிரைவர் 'என்று அறிமுகமாகியுள்ளார். 10 நாட்களுக்கு பின் சோமன் நாயரை தொடர்பு கொண்ட சதீஷ், 'உங்கள் மகளின் தேர்வு முடிவு சீனியாரிட்டி 510 - வது இடத்தில் இருப்பதாகவும், ரூ. 20 லட்சம் தந்தால் அவருக்கு அரசு டாக்டர் வேலை கிடைக்கும்' என்று கூறியுள்ளார். இதற்கு முன் தொகையாக ரூ. 7 லட்சம் கேட்டுள்ளார்.

இதை நம்பிய அவர் சதீஷ் கூறியபடி அவரது மைத்துனர் லோகேஷ் குமார் 28 ,என்பவரது வங்கி கணக்கிற்கு ஜிபே மூலம் ரூ.ஒரு லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ரூ.ஐந்து லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் மே 2 ல் தேர்வு முடிவு வெளியான போது சோமன் நாயரின் மகள் பெயர் அதில் இடம் பெறவில்லை. இதைத்தொடர்ந்து சதீஷிடம் கேட்டபோது 'அடுத்த கட்டமாக 40 பேர் பெயர் பட்டியல் வெளியாகிறது. அதில் உங்கள் மகளுக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும்' என்றும் கூறியுள்ளார். இதை ஏற்காத சோமன் நாயர் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சோமன் நாயர் வீட்டுக்கு வந்த லோகேஷ் குமார் 'பாதி பணம் தருவதாகவும் மீதி பணம் சதீஷிடம் இருப்பதாகவும்' தெரிவித்தார். அதற்கு சோமன் நாயர், 'உங்கள் அக்கவுண்டில் தான் எல்லா பணமும் அனுப்பி வைத்தேன். நீங்கள் தான் தர வேண்டும்' என்று கூறிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து சோமன் நாயர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். லோகேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். சதீஷ் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement