இயற்கை அழகு கொஞ்சும் நல்ல தண்ணீர் தீவில் அதிகளவில் மயில்கள் நடமாட்டம்; 2010 க்கு பிறகு தடை நிலவுகிறது

சாயல்குடி: சாயல்குடி அருகே மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டி இயற்கை அழகு கொஞ்சும் தீவுகள் வரிசையாக அமைந்துள்ளன.

தீவுகளிலேயே மிகவும் அருகாமையில் அமைந்துள்ள தீவாக நல்ல தண்ணீர் தீவு விளங்குகிறது.

தீவுகளின் அருகே மாரியூர், மேலமுந்தல், கீழமுந்தல், ஒப்பிலான் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்கள் உள்ளன. சாயல்குடி வனச்சரகத்தில் ஏழு தீவுகள் உள்ளன. இவற்றில் நல்ல தண்ணீர் தீவு 110 ஹெக்டேரில் உள்ளது. இங்கு மிகுதியான அளவு மயில்கள் உள்ளன.

சாயல்குடி மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் சார்பில் பராமரிப்பில் உள்ள இத்தீவில் மயில்களுக்கு நாட்டுப் படகு மூலமாக இரை கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் வழங்கப்படுகின்றன. மன்னார் வளைகுடா வனச்சரகத்தினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மயில்களுக்கு இரை வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

நல்ல தண்ணீர் தீவில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற கத்தாமரத்து தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. முன்பு இக்கோயிலில் சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடற்கரையோர மக்கள் வழிபாட்டிற்காக சென்று வந்த நிலையில் 2010க்கு பிறகு தீவுப் பகுதிக்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

அக்காலக் கட்டங்களில் மயில்களுக்கு மிகுதியான அளவு இரைகள் பக்தர்கள் வழங்கி வந்தனர். பின்னர் அப்பணியை வனத்துறையினர் செய்து வருகின்றனர். நல்ல தண்ணீர் தீவில் 3 முதல் 5 அடி ஆழத்தில் எங்கு தோண்டினாலும் நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆகவே அதற்கு அப்பெயர் வந்தது.

வனத்துறை சார்பில் சவுக்கு, பனை மரங்கள், பூவரசு உள்ளிட்ட மிகுதியான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு தற்போது அடர் வனமாக திகழ்கிறது. தீவை சுற்றிலும் நெருக்கமான அளவில் பவளப்பாறைகள் பாதுகாப்பு அரணாக தீவிற்கு விளங்குகிறது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

தற்போது அதிக எண்ணிக்கையில் மயில்கள் இனப்பெருக்கமாகி உள்ளன. அவற்றிற்கு உரிய முறையில் தன்னார்வலர்களிடமிருந்து அரிசி, நெல் மணிகள் மற்றும் இரையை பெற்று அனுப்புவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக நன்னீர் குழிகளை தோண்ட வேண்டும் என்றனர்.

Advertisement