கொள்முதல் நிலையங்களில் ரூ.840 கோடி நெல் சேதம்; அன்புமணி கண்டனம்


தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில், நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த, 840 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக, தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.


சேதத்தின் மதிப்பை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுமையாக தெரிவிக்கவில்லை. முழுமையான பாதிப்பு தெரியவந்தால், சேதத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.



நெல் சேமிப்புக் கிடங்குகளில் இடவசதி இல்லாதது, கூரைகள் ஒழுகுவது, சுவர்களில் விரிசல், எலித்தொல்லைகள் போன்றவை தான் நெல் மூட்டைகள் சேதமடைவதற்கு காரணம். இதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். நெல் சேமிப்பு கிடங்குகளில், ஆண்டுக்கு சராசரியாக, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த தொகையை கொண்டு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 66 ரூபாய் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முடியும்.


விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்க மறுக்கும் தமிழக அரசு, அந்த தொகையை வீணடிக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், கொள்முதல் நிலையங்களிலும், சேமிப்பு கிடங்குகளிலும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு, கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.


இருக்கும் சேமிப்பு கிடங்குகள் சரியான கட்டமைப்பில் தான் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.

- அன்புமணி,

தலைவர், பா.ம.க.,

Advertisement