வைகுண்டவாச பெருமாள் கருட சேவை

விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில், நாளை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜனகவல்லி நாயகி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், இந்தாண்டு பிரமோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

தொடர்ந்து, தினசரி காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், இரவு உற்சவர் வீதியுலா பஜனையும் நடந்து வருகிறது. நேற்று காலை 9.00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு, உற்சவர் ஜனகவல்லி நாயகி சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. நாளை 9ம் தேதி, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி காலை 6.30 மணிக்கு முக்கிய விழாவான தேரோட்டம் நடக்கிறது.

Advertisement