இளையராஜாவின் இசை மழை நனைந்த ரசிகர்கள் உற்சாகம்
கோவை : இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரசித்தனர்.
ரசிகர்களை மகிழ்விக்க, இசைஞானி இளையராஜா அவ்வப்போது, இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். இவர் பாடுவதை நேரில் கேட்டு மகிழ பலர் விரும்புகின்றனர். கடந்த முறை கோவையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்த போது பல ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்கு வெளியில், சாலை ஓரத்தில் எல்லாம் நின்று கொண்டு மணிக்கணக்கில் ரசித்தனர்.
இந்நிலையில், மவுன ராகம் முரளி சார்பில், கோவை, கோவைப்புதுார் 'ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி' மைதானத்தில், நேற்று இளையராஜா இசைக்கச்சேரி நடந்தது. இரவு 7:20 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. இளையராஜா, கங்கை அமரன், யுகேந்திரன், ஹரிசரண் உட்பட, 20க்கும் மேற்பட்ட பாடகர்கள் பல்வேறு காலகட்டங்களில் இருந்து 40 பாடல்களை பாடினர்.
நிகழ்ச்சியை காண, கோவை மட்டுமல்லாமல், திருப்பூர், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்தனர். ரசிகர்கள் வந்து செல்ல வசதியாக தனித்தனி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்த பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை இளையராஜாவுக்கு சால்வை அணிவித்து பேசுகையில், ''சந்தோஷம், துக்கம் என அனைத்து நேரத்திலும் இசைஞானியின் இசை நம்முடன் இருந்துள்ளது. பாரத பிரதமர் மோடி முதல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா உள்ளார். லண்டனில் 'சிம்பொனி' செய்து விட்டு இளையராஜா கோவை வந்ததற்காக, நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்,'' என்றார்.