சிவகாசியில் சமுதாய கூடத்தில் குடிநீர், மின்சார வசதி இல்லை

சிவகாசி: சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான நேரு காலனியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் குடிநீர் ,மின்சாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் மக்கள் விசேஷங்கள் நடத்துவதில் சிரமப்படுகின்றனர்.

சிவகாசி மாநகராட்சி சார்பில் பள்ளப்பட்டி நேரு காலனியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதில் குடிநீர், மின்சாரம், ஆண் பெண் தனி தனி கழிப்பறைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தவிர சமையல் கூடம் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. சில மாதங்கள் மட்டுமே அனைத்து வசதிகளும் இருந்த நிலையில் தற்போது சமுதாய கூடத்தில் குடிநீர், மின்சாரம் இல்லை. தவிர கழிப்பறைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ள இப்பகுதியினர் எந்த வசதிகளும் இல்லாத நிலையிலும் வேறு வழியின்றி இந்த சமுதாய கூடத்தில் தான் பெரும்பாலும் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்தி வருகின்றனர். எனவே தற்போதும் பயன்பாட்டில் உள்ள இந்த சமுதாயக்கூடத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement