சிறுவர் பூங்காவில் உபகரணங்கள் சேதம்

பரமக்குடி : பரமக்குடி சிறுவர் பூங்காவில் உபகரணங்கள் சேதமடைந்துள்ள நிலையில் குழந்தைகள் காயத்துடன் திரும்பும் நிலையில் உள்ளது.

பரமக்குடி ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்கா அமைந்து 15 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அதே பழைய உபகரணங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

இங்கு குழந்தைகள் பொழுது போக்கும் வகையில் சறுக்கு, ஊஞ்சல் மற்றும் சிறிய ரக பிளாஸ்டிக் பந்துகள் அடங்கிய கூடம் என அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உபகரணங்கள் பலவும் துருப்பிடித்து உடைந்துள்ளது.

இதேபோல் பிளாஸ்டிக் பந்துகள் அடங்கிய கூடம் ஒட்டுமொத்தமாக வீணாகி உள்ளது. தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் கட்டணத்தை வசூலிக்கும் நிர்வாகம் எந்த வசதியும் செய்யாமல் இருக்கின்றனர்.

மேலும் பரமக்குடி நகரில் எந்தவித மாற்று பொழுது போக்கு அம்சங்களும் இல்லை. இச்சூழலில் பூங்காவை சுற்றி இறைச்சி கடைகள் அதிகளவில் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் எலி தொல்லை அதிகரித்துள்ளது.

ஆகவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement