துணை சுகாதார நிலையத்திற்கு ரோடு வசதி: மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்துார் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், கண்மாய்க்கரை இறக்கத்திலிருந்து துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல பாதுகாப்பான ரோடு வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் செங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாலம்புத்துார் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக தினமும் ஏராளமான மக்கள் டூவீலர்களில் பயணிக்கின்றனர். மழை பெய்யாத நிலையிலும், கண்மாய் ஊற்று நீரால் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். வாகனங்கள் பழுதாகி நின்று விடுகிறது.

மேலும் கண்மாய் கரை இறக்கத்திலிருந்து துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையும் பாதுகாப்பற்றும், நடைபாதை ஆக்கிரமிப்புகளால் கர்ப்பிணிகள் துணை சுகாதார நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ வாகனங்கள் கூட வந்து செல்ல சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, இவ்விரு பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement