அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி

சிவகாசி : வெம்பக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அறுவடைக்கு தயாரான ஒரு நிலையில் உள்ள நித்திய கல்யாணி செடியினால் லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் பூசாரிப்பட்டி, காக்கிவாடன்பட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், லட்சுமியாபுரம், எதிர் கோட்டை, எட்டக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் முக்கிய சாகுபடியாக உள்ளது. இந்த பயிர்கள் அறுவடைக்கு பின்னர் நித்திய கல்யாணி முக்கிய சாகுபடியாக உள்ளது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நித்திய கல்யாணி பயிரிடப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான இச்செடியால் பாதிக்குப் பாதி லாபம் என்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிடுகின்றனர்.

மானாவாரி, மோட்டார் பாசனத்தில் ஜனவரியில் பயிரிடப்பட்ட இச்செடி தற்போது அறுவடைக்கு தயாராகி வருகின்றது. பெரிய அளவில் பராமரிப்பு இல்லாவிட்டாலும் ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், உரமிடுதல் என ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகிறது. இச்செடியை வேரோடு பிடுங்கி காயவைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இச்செடிக்கான விதைகளை எங்கே வாங்குகின்றனரோ, அவர்களே நேரடியாக வந்து செடியை வாங்கிச் சென்று விடுகின்றனர். இதனால் விற்பனை செய்வது சிரமம் இல்லை. ஒரு கிலோ ரூ. 60 என ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement