எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--

ராஜபாளையம் : எரியாத தெருவிளக்குகள், வாறுகால், குடிநீர் இல்லை, குடியிருப்பு அருகே திறந்த நிலையில் கிணறு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

ராஜபாளையம் அருகே மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி சக்தி நகரில் குடியிருப்புகள் உருவாகி 30 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதி இல்லை. மெயின் தெருக்களில் மின்கம்பங்களில் விளக்கு முழுமையாக எரியாததால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குடியிருப்பு தெருப்பகுதிகளில் இருந்து மெயின் ரோடு உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதுடன் தென்றல் நகர் மெயின் ரோட்டில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் வாறுகால் அமைக்கப்படவில்லை. கழிவு நீரை வீட்டின் முன் தேக்குவதால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுடன் தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது.

ஆறு தெருக்களில் நான்கு தெருக்களுக்கு தார் ரோடு போட்டுள்ளனர். குடியிருப்பு அருகே திறந்த நிலையில் மக்கள் பயன்படுத்தாத கிணறு உள்ளது. மூட வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதல் தெருவில் சமூக விரோதிகள் திறந்தவெளி பாராக பயன்படுத்துவதை போலீசார் ரோந்து மேற்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.

Advertisement