காற்று, மழையால் ஏலத் தோட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்

கம்பம் : சமீபத்தில் பெய்த மழை, காற்றில் இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்களில் ரூ. 10 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கேரள வேளாண் துறை அறிவித்துள்ளது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகம், கேரளாவை சேர்ந்த விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆன விலாசம், புத்தடி, பைசன் வேலி, வல்லக்கடவு, வாகமன், மயிலாடும்பாறை, குமுளி, பாம்பாடும்பாறை, சாஸ்தாநடை, மாலி, வண்டன் மேடு மாவடி, அடிமாலி, புளியன் மலை, மாதவன் கானல், மேப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை, காற்றால் ஏலத்தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள வேளாண் துறை பாதித்த ஏலத்தோட்டங்களை சர்வே செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 800 முதல் ஆயிரம் ஏக்கர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . சுமார் ரூ.10 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது, 6500 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதித்த ஏலத்தோட்டங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஏலக்காய் சாகுபடி ஆலோசகர் அன்பழகன், 'எந்த அடிப்படையில் கணக்கெடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஸ்பைசஸ் வாரியம் ஆய்வு நடத்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்தாண்டு வெயிலால் பாதிப்பு ஏற்பட்டது. இந்தாண்டு கோடை மழை பெய்து செடிகள் நன்றாக இருந்தது. ஆனால் சமீபத்தில் பெய்த மழை காற்றால் கடும் பாதிப்பு உள்ளது. தற்போது அழுகல் நோயும் தாக்கி உள்ளது. எனவே பாதிப்பு 20 சதவீதம் வரை இருக்கும்என்றார்

Advertisement