குவாரி மோசடிக்கு துணை போன அதிகாரிகள்: லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

2

சென்னை: 'கோவையில் நடந்த குவாரி மோசடியில், கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரையிலான தொடர்பு குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு, தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில், செந்தாமரை என்பவர், தன் பட்டா நிலத்தில், 2009 முதல் கல் மற்றும் கிராவல் குவாரிகளை நடத்தி வருகிறார். இந்த குவாரிகளில் விதிமீறல் நடப்பதாக கூறி, ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2020ல் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, 2021ல் சம்பந்தப்பட்ட குவாரிகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தது. அதில், சிறியளவில் மட்டுமே விதிமீறல் உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்த நீதிமன்றம், விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

அதேநேரத்தில், கூட்டுக்குழு அறிக்கையை ஆய்வு செய்த பொள்ளாச்சி சப்- - கலெக்டர், குவாரியில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட, சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி, செந்தாமரைக்கு, 32 கோடியே, 29 லட்சத்து, 77,792 ரூபாய் அபராதம் விதித்து, 2022 ஜனவரியில் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, கனிம வளத்துறை கமிஷனரிடம், செந்தாமரை மேல்முறையீடு செய்தார். சப் -- கலெக்டரின் நடவடிக்கைக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு எதிரான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.

சரியான முடிவு



செந்தாமரையின் மேல்முறையீட்டை விசாரித்த கனிம வளத்துறை கமிஷனர், பொள்ளாச்சி சப் - -கலெக்டரின் உத்தரவை மாற்றியும், அதை ரத்து செய்தும் உத்தரவிட்டார். சப் -- கலெக்டர் விதித்த மொத்த அபராத தொகையை, 2 கோடியே, 48 லட்சத்து 9,119 ரூபாயாக குறைத்து, அதில், 25 லட்சம் ரூபாயை உடனே செலுத்தவும், மீதித் தொகையை மாதம், 8 லட்சம் ரூபாய் வீதம் தவணை முறையில் செலுத்தும்படியும் தெரிவித்தார்.

இதை எதிர்த்து, ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், கனிம வளத்துறை கமிஷனரின் உத்தரவை, தாமாக முன்வந்து விசாரித்த இயற்கை வளங்கள் துறை செயலர், 2022 நவம்பர், 25ல் கனிம வளத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்; சப் - -கலெக்டர் விதித்த அபராத தொகையை உறுதி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தாமரை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், 'அனுமதிக்கப்பட்ட பட்டா நிலத்தில் இருந்து தான் கனிமங்கள்வெட்டி எடுக்கப்பட்டன.கனிம வளத்துறை கமிஷனரின் உத்தரவை தொடர்ந்தே, மனுதாரர் குவாரி நடவடிக்கையை தொடர்ந்து வருகிறார். அனைத்து விதமான சுற்றுச்சூழல் அனுமதிகளும் உள்ளன என்பதால், எந்த விதிமீறலும் இல்லை' என்று, தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அபராத தொகையை குறைத்து, கனிம வளத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை ரத்து செய்த இயற்கை வளங்கள் துறை செயலரின் உத்தரவு சரியான முடிவு. மனுதாரருக்கு குவாரி நடத்த உரிமை எதுவும் இல்லை. சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகை, அவரிடம் இருந்து வசூலிக்கப்படும்' என்றார்.

அதிர்ச்சி



இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு, ஐந்து குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குவாரிகளில் இருந்து கற்கள், கிராவல் எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களுடன் அட்டவணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இடம் பெற்ற விபரங்களுக்கு, மனுதாரர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

முறையான உரிமம் பெறாமல், சட்ட விரோதமாக, 5 லட்சத்து, 96,687 கன மீட்டர் அளவுக்கு கல், கிராவல் போன்ற கனிமங்களை எடுத்துள்ளார். இந்த மீறல்கள் மிகக் குறைவு அல்ல; அவை பன்மடங்கு. இந்த குற்றத்துக்காக, 5 ஆண்டு வரை சிறை தண்டனையும், ஹெக்டேருக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில், சட்டப் பிரிவுகள் உள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில், மனுதாரருக்கு எதிராக புகாரை, அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை வசூலிப்பதில், எந்த சமரசமும் இருக்கக் கூடாது. நுாறு சதவீத தொகையை வசூலிக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் சப் - -கலெக்டர் சரியான அபராதம் விதித்து உள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே, நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து, பூமித்தாயை காப்பாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டது தான்.

தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர். ஆனால், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய, கனிவளத்துறை கமிஷனரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது.

அவரின் உத்தரவு, மனசாட்சி உள்ள ஒருவரால் புரிந்து கொள்ளவும், கற்பனை செய்யவும் முடியாத அளவில் உள்ளது. அவரது உத்தரவு மக்களையும், அரசையும் ஏமாற்றும் விதமாகவும், மோசடியாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, உயர் நீதிமன்ற பொது நல வழக்கு விசாரணையின்போது, குவாரியை மூடி விட்டதாக, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து விட்டு, மறுபுறம் குவாரியை செயல்பட அனுமதித்து உள்ளனர்.

பாராட்டு



இதன் வாயிலாக, இந்த உயர் நீதிமன்றத்தையும் அதிகாரிகள் ஏமாற்றியுள்ளனர். எனவே, சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையையும், மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும். மனுதாரரின் குவாரி உரிமம், 2023-ம் ஆண்டே முடிந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை.

இயற்கை வளங்கள் துறை செயலர் எடுத்துள்ள நடவடிக்கையை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

இந்த குவாரி மோசடி நடந்த காலத்தில், பணியில் இருந்த கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை, யாருக்கு என்ன பங்கு உள்ளது என்பது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை வாயிலாக, தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பின், அவர்கள் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது, குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement