ஏழாயிரம் பண்ணையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால் நெருக்கடி

சாத்துார் : ஏழாயிரம் பண்ணைஅதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டில் நாளுக்கு நாள் தள்ளுவண்டி கடைகள் ,துணிக்கடைகள் ,பாஸ்ட் புட், சிக்கன் ஸ்டால்கள் ,பெட்டிகடைகள் புற்றிசல் போல் அதிகரித்து வருகிறது. சாலை வரை ஆக்கிரமித்து போடப்பட்டு இருக்கும் இந்த கடைகளால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. காலை மாலை நேரங்களில் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு வேனில் திரும்பும் தொழிலாளர்களும், ஆட்டோக்களில் வீடு திரும்பும் மாணவர்களும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் மெயின் ரோட்டை கடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விபத்து, நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளும் ஆம்புலன்ஸில் காத்திருந்து தவிக்கும் நிலை உள்ளது.போலீசார் நெரிசலை சரி செய்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலை வரை ஆக்கிரமித்துள்ள கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி மக்கள் தடையின்றி பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement