விதிமுறைகளை மீறும் வாகனங்கள் காரைக்குடியில் போக்குவரத்து நெரிசல்

காரைக்குடி : காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே செகண்ட் பீட்டில், அடிக்கடி போக்குவரத்து விதிமுறைகள் மாற்றப்படுவதாலும், சாலை மற்றும் வரத்துக் கால்வாய்பணியாலும் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவலம் நிலவுகிறது.

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து செகண்ட் பீட், செக்காலை ரோடு, கல்லுக்கட்டி, அம்மன் சன்னதி செல்லும் வழி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, கல்லல்செல்லும் பஸ்கள் பெரியார் சிலையிலிருந்துசெக்காலை, கழனிவாசல், வ.உ.சி., ரோடு வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து செல்லும் வாகனங்கள் கல்லுக்கட்டி மகர் நோன்பு திடல் வழியாகவோ அல்லது வ.உ.சி., ரோடு, ராஜீவ் காந்தி சிலை வழியாகவோ புது பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல வேண்டும்.

மதுரை, கல்லல் செல்லும் பஸ்கள் விதிமுறைகளை மீறி பெரியார் சிலை, செகண்ட் பீட் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் செகண்ட் பீட் பகுதியில் தற்போது சாலைப் பணியும், வரத்து கால்வாய் பணியும் நடைபெறுகிறது. இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement