20ஆண்டுகளாக அல்லல்படும் அந்தோணியார் காலனி மக்கள்; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு

மூணாறு,: அந்தோணியார் காலனியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக தெரியவந்தும், அதற்கு நிரந்தர தீர்வு இன்றி 20 ஆண்டுகளாக உயிருக்கு அஞ்சி மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

மூணாறு நகரையொட்டி உள்ள அந்தோணியார் காலனியில் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அங்கு 2005 ஜூலை 25ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட நான்கு பேர் இறந்தனர்.

அங்கு நிலத்தடியில் நீரோட்டம் உள்ளதால், அது மழை காலங்களில் அதிகரித்து நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுனர்கள் ஆய்வில் தெரியவந்தது. அதற்கு தீர்வு காணாததால் மக்கள் அச்சத்தில் நிம்மதி இழந்தனர்.

கண்காணிப்பு: அங்கு அமிர்தா விஸ்வ வித்யா பீடம் சார்பில் நில அதிர்வுகளை முன்கூட்டியே கண்டறியும் வகையிலான கருவி 2009ல் பொருத்தப்பட்டு கொல்லத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் 'வயர்லெஸ் நெட் ஒர்க்' மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அதன் சிக்னலை வைத்து முன்னெச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும்போது மக்கள் வெளியேற்றப்படுவது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையின்போது அந்தோணியார் காலனியில் வசிக்கும் ஒரு சில குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். சிலர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இது போன்று ஆண்டு தோறும் நடப்பதால் அப்பகுதி மக்களின் பணி, மாணவ, மாணவிகளில் கல்வி ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுவதுடன் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

அப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் கடந்த 20 ஆண்டுகளாக நிம்மதி இழந்து அல்லல்பட்டு வருகின்றனர்.

Advertisement