தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள்; காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ்

மூணாறு : கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறுமாறு நெடுஞ்சாலை, வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே தேவிகுளம், லாக்காடு, கேப் ரோடு ஆகிய பகுதிகளில் ரோட்டோரங்களை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அவை போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதுடன் சுற்றுலா பயணிகள், கடைக்காரர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இரண்டு முறை நோட்டீஸ் அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றி கொள்ள வேண்டும் எனவும் அல்லாத பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடைகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.

வருவாய் துறை நோட்டீஸ்: இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால், தேவிகுளம் சிறப்பு தாசில்தார் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் தேவிகுளம், லாக்காடு, கேப் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மூன்று நாட்களில் காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் நோட்டீஸ் அளித்தனர்.

Advertisement