சுருளியாறு மின் நிலைய பராமரிப்பு ஜூன் 14 வரை உற்பத்தி நிறுத்தம்

கம்பம் : சுருளியாறு நீர் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி ஜுன் 4ல் துவங்கி 14 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நீர் மின் நிலையம் லோயர்கேம்பில் 4 ஜெனரட்டர்கள் மூலம் 168 மெகாவாட், சுருளியாறு மின் நிலையத்தில் ஒரு ஜெனரட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. சுருளியாறு மின் நிலையம் ஆண்டு முழுவதும் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யும். ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மே மாதம் ஆண்டு பராமரிப்பு பணி - மேற்கொள்வார்கள். காரணம் அப்போது அணைகளில் தண்ணீர் இருக்காது. பராமரிப்பு பணிகள் 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை நடைபெறும்.ஆனால் இந்தாண்டு மே மாதம் தொடர் மழை பெய்ததால், மின் உற்பத்தி நடைபெற்றது. பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது மழை குறைந்திருப்பதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் 4 ல் துவங்கிய பணி ஜூன்14 வரை 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, 'மே மாதம் 10 நாட்கள் பராமரிப்பு பணிகள் செய்துள்ளோம். தற்போது 10 நாட்கள் செய்து வருகிறோம். தண்ணீரை வீணாக்க கூடாது என்பதற்காகவும், தேவை இருந்ததாலும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஜுன் 14 க்கு பின் தேவைக்கேற்றவாறு வழக்கம் போல் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

Advertisement