வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் தேடி வரும் வாய்ப்பு! ; தக்கவைக்க தயாராகும் தொழில் துறை

திருப்பூர்: பிரிட்டனுடனான ஆயத்த ஆடை வர்த்தகம் நடப்பாண்டில் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதால், புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறவும், தக்க வைக்கவும், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் முழு வீச்சில் தயாராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நம் நாட்டின் பின்னலாடை தலை நகரமாகிய திருப்பூரில் இருந்து, தற்போதைய நிலவரப்படி, பல்வேறு நாடுகளுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதியும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும் நடந்து வருகிறது. கொரியா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள் உட்பட, ஒன்பது நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய நீண்டகால முயற்சி நடந்து வருகிறது.

நமது நாட்டை பொறுத்தவரை, ஆயத்த ஆடை ஏற்றுமதியில், மூன்றாவது இடத்தில் இருப்பது பிரிட்டன். அதாவது, மொத்த ஏற்றுமதியில், பிரிட்டன் 10 சதவீதம் பங்களிக்கிறது.

ஒட்டு மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பிரிட்டனுக்கு மட்டும், 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதியாகிறது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியில், பிரிட்டன் மட்டும், 5,000 கோடி ரூபாய் என்ற பங்களிப்புடன் இருக்கிறது. பிரிட்டன் - இந்தியா இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியாக, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது; விரைவில் அமலுக்கு வர உள்ளது,

இதன் காரணமாக, திருப்பூரின் முன்னணி ஏற்றுமதியாளர்கள், பிரிட்டனுடன் வரியில்லாமல் வர்த்தகம் செய்வதற்கான பேச்சு வார்த்தையை துவக்கியுள்ளனர். குறிப்பாக, பிரிட்டனின் முன்னணி நிறுவனங்கள், திருப்பூர் வந்து, பசுமை சார் உற்பத்தி தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர். விரைவில், புதிய வர்த்தக வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

Advertisement