தண்ணீருக்காக சட்டப்போராட்டம் காங்., - எம்.எல்.ஏ., அறிவிப்பு

ராம்நகர் : ஹேமாவதி அணையின் தண்ணீரை மாகடிக்கு கொண்டு வர, சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, ஹேமாவதி அணையின் தண்ணீரை மாகடிக்கு கொண்டு வர, துமகூரு மாவட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

மாகடிக்கு தண்ணீர் கொண்டு வர சட்டப் போராட்டம் நடத்த உள்ளோம். இன்னும் 10 நாட்களில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்வோம். இந்த விஷயத்தில் அரசு, உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நதி நீர் பகிர்வு ஆணையம் இருப்பது போன்று, ஹேமாவதி நதி நீர் பகிர்வு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை ஆணையம் தீர்மானிக்கட்டும்.

தண்ணீரை பெற மாகடியில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை செல்வோம். இது அரசுக்கு எதிரான போராட்டம் இல்லை. துமகூரு மாவட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்.

விதான் சவுதா காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினால் எந்த பயனும் கிடைக்காது. மாகடி முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத்துக்கு பொது அறிவு கிடையாது. ஆணவ பேச்சு, திமிராக நடந்ததால் தான் மக்கள் அவரை தோற்கடித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement