இசைப்பள்ளி சான்றிதழ் கல்வித்துறை புது விளக்கம்
சென்னை: 'அரசு இசைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ், அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி சான்றிதழ்களுக்கு இணையானது' என, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.
பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை:
இசைப்பள்ளி மாணவர்கள், உயர்கல்வி வாய்ப்பு பெற, இடைநிற்றலை தவிர்க்க, வேலை வாய்ப்பு பெற, அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக, 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க வேண்டும்.
வழக்கமாக மாணவர்கள் படிக்கும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பதிலாக, இசைப்பள்ளிகளில் வழங்கப்படும் முதன்மைப்பாடம், துணைப்பாடம் மற்றும் வாய்மொழித்தேர்வு, இசையியல் பாடங்களின் எழுத்து தேர்வு போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
பத்தாம் வகுப்பை முறையாக பள்ளியில் படித்தோ, தனித்தேர்வராக தேர்வெழுதியோ, அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, பிறகு நேரடியாக இசைப்பள்ளியில் மூன்றாண்டுகள் படித்து, நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வகுப்பின் கலை மற்றும் தொழில் பிரிவு பாடப்பிரிவுக்கு இணையான சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுஉள்ளது.