பாம்பன் துாக்கு பாலம் மீண்டும் பழுதா: 15 நாட்களாக காத்திருக்கும் கப்பல்

ராமேஸ்வரம்: -ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ரயில் துாக்கு பாலம் திறக்கப்படாததால் 15 நாட்களாக இரு பாய்மர படகுகள், ஒரு இழுவை கப்பல் காத்திருக்கின்றன. மீண்டும் பாலம் பழுதா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

கர்நாடகா மங்களூரு மற்றும் மும்பையில் இருந்து புறப்பட்ட இரு பாய்மர படகுகள், ஒரு இழுவை கப்பல் முறையே கடலுார், ஆந்திரா காக்கிநாடா செல்ல மே 25ல் பாம்பன் கடற்கரைக்கு வந்தன. இவை பாம்பன் ரயில் பாலம் திறந்ததும் கடந்து செல்ல வேண்டும். ஆனால் அவை வந்த நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியிருந்ததால் பாம்பனில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதனால் ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் ரயில் துாக்குபாலம் திறக்கப்படவில்லை.

இரு பாய்மர படகுகள், இழுவை கப்பல் பாம்பனிலேயே காத்திருந்தன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பாம்பனில் காற்றின் வேகம் தணிந்து கடல் அலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. இச்சூழலில் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படாததால் 15 நாட்களாக 20 க்கு மேற்பட்ட மாலுமிகளுடன் அவை காத்திருக்கின்றன.

பாம்பன் ரயில் துாக்கு பாலம் பழுது ஏற்பட்டிருக்குமோ என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் ரயில்வே உயர் அதிகாரிகள் ஒப்புதல் பெறுவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால் ரயில் துாக்கு பாலம் திறப்பு தள்ளிபோவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement