கங்காவதி தொகுதிக்கு பொறுப்பு அமைச்சர் சிவராஜ் தங்கடகி உறுதி

கொப்பால், : “கங்காவதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஜனார்த்தன ரெட்டி சிறையில் உள்ளதால், அந்த தொகுதிக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்,” என, அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.

கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கங்காவதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஜனார்த்தன ரெட்டி சிறையில் உள்ளார்.

எம்.எல்.ஏ., இல்லாததால் தங்கள் குறைகளை யாரிடம் சொல்வது என்று மக்கள் குழப்பம் அடைய வேண்டாம். கங்காவதி தொகுதிக்கு நான் பொறுப்பு.

வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கங்காவதியில் தங்கி இருந்து, மக்களிடம் குறைகேட்பேன். பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வேன்.

கங்காவதி நகரில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. சாலைகளை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

கங்காவதி மீது கூடுதல் கவனம் செலுத்தும்படி சித்தராமையா எனக்கு உத்தரவிட்டு உள்ளார். எம்.எல்.ஏ., இல்லை என்றால் தொகுதியின் மேம்பாடு நின்றுவிடாது. அரசு இருக்கிறது. ஆனேகுந்தி விழாவை சிறப்பாக நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement