மாநில ஜூனியர் கூடைப்பந்து காஞ்சி, திருவள்ளூர் அணி வெற்றி

சென்னை:தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடக்கிறது.

இதில் மகளிருக்கான ஆட்டத்தில், சென்னை, சேலம், நீலகிரி, தேனி, கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 41 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று காலை நடந்த, 'நாக் அவுட்' ஆட்டத்தில், காஞ்சிபுரம் மற்றும் மதுரை அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான போட்டியில், 60 - 48 என்ற கணக்கில் காஞ்சிபுரம் அணி வெற்றி பெற்றது.

மற்ற போட்டிகளில், தஞ்சாவூர் அணி, 76 - 39 என்ற கணக்கில் திருப்பூரையும், திருப்பத்துார், 55 - 26 என்ற கணக்கில் வேலுாரையும் தோற்கடித்தன.

கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலுார் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 43 - 41 என்ற கணக்கில் கிருஷ்ணகிரி அணி வென்றது.

புதுக்கோட்டை அணி, 50 - 19 என்ற கணக்கில் கன்னியாகுமரி அணியையும், தென்காசி 78 - 63 என்ற கணக்கில் கடலுார் அணியையும், திருவள்ளூர், 44 - 24 என்ற கணக்கில் நாமக்கல் அணியையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்ந்து நாளை மறுநாள் வரை நடக்கின்றன.

Advertisement