அசைவ உணவகத்தில் சைவ உணவு வாங்குவது மத உணர்வை புண்படுத்துமா?

1

மும்பை: 'அசைவ உணவு மத உணர்வுகளை புண்படுத்தினால், சைவ மற்றும் அசைவ உணவுகள் இரண்டையும் வழங்கும் உணவகத்தில் இருந்து, ஏன் ஒருவர் ஆர்டர் செய்ய வேண்டும்' என, நுகர்வோர் குறைதீர் கமிஷன் கேள்வி எழுப்பி உள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த இருவர், 2020 டிசம்பரில், அங்குள்ள ஒரு உணவகத்தில், சைவ மோமோஸ் என்ற தின்பண்டத்தை ஆர்டர் செய்தனர்.

ஆனால் அவர்களுக்கு, சைவ மோமோசுக்கு பதிலாக, சிக்கன் மோமோஸ் வழங்கப்பட்டது.

ஊழியர்களிடம் இரண்டு முறை வலியுறுத்தியும், சிக்கன் மோமோஸ் வழங்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

கடையின் அலட்சியத்தால் மன உளைச்சல் ஏற்பட்டதோடு, மத உணர்வுகள் புண்பட்டதாகக் கூறிய அவர்கள், 6 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, மும்பை நுகர்வோர் குறைதீர் கமிஷனில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை மறுத்த உணவக நிர்வாகம், இருவரும் சிக்கன் மோமோஸ் தின்பண்டத்தையே ஆர்டர் செய்ததாகவும், உணவக ஊழியர்களை தாக்கி பணத்தை திரும்ப பெற்றதாகவும் தெரிவித்தது.

மேலும், நல்லெண்ண அடிப்படையில், அவர்களுக்கு 1,200 ரூபாய் மதிப்புள்ள வவுச்சரை கொடுத்ததாகவும், அவர்கள், 3 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் உணவக நிர்வாகம் குறிப்பிட்டது.

இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த மும்பை நுகர்வோர் குறைதீர் கமிஷன் பிறப்பித்த உத்தரவு:

ஆரோக்கியமான நபர், சைவ மற்றும் அசைவ உணவை உட்கொள்வதற்கு முன், அதை வேறுபடுத்திப் பார்க்க முடியும். அசைவ உணவு, புகார்தாரர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். சைவ மற்றும் அசைவ உணவுகள் இரண்டையும் வழங்கும் உணவகத்தில் இருந்து, ஏன் அவர்கள் சைவ உணவை ஆர்டர் செய்ய வேண்டும்?

சைவ உணவுக்கென பிரத்யேகமாக உள்ள உணவகத்தில், அவர்கள் ஆர்டர் செய்திருக்கலாமே? இந்த விவகாரத்தில், உணவகத்தின் சேவையில் எந்த குறைபாட்டையும் புகார்தாரர்கள் நிரூபிக்கவில்லை. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement