அத்துமீறி கொட்டப்படும் குப்பை குடிநீர் வாரிய இடத்தில் சீர்கேடு

அயனாவரம்,:அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட வில்லிவாக்கம், நியு ஆவடி சாலையில், அயனாவரம் அருகில் காலியாக உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், பூமிக்கு அடியில் ராட்சத குழாய் 3 கி.மீ., துாரம் செல்கிறது.

இச்சாலையில், வாரியத்திற்கு சொந்தமான இடமான வில்லிவாக்கம், ஐ.சி.எப்., உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, மீதமுள்ள இடங்கள் அப்படியே விடப்பட்டன.

மேலும், காலி இடமாக இருப்பதால், அங்கு அப்பகுதிவாசிகள் குப்பை குவிப்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

அயனாவரம் பகுதியில் உள்ள சக்கரவர்த்தி நகர், தந்தை பெரியார் நகர் மற்றும் காமராஜர் தெருக்களுக்கு செல்ல, நியூ ஆவடி சாலையை கடந்து, இணைப்பு பாலம் வழியாக செல்ல வேண்டும்.

தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இடத்தில், குப்பை கழிவு தேங்கி இருப்பதால், பல ஆண்டுகளாக சுகாதார சீர்கேடு நீடிக்கிறது. அதிகளவில் தேங்கியுள்ளதால், குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது. நோய் தொற்று அச்சமும் ஏற்பட்டுள்ளது.

வாரியத்திற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தும், சில குடியிருப்புவாசிகள் அத்துமீறி குப்பை கொட்டி வருகின்றனர்.

தொடர்ந்து, இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியாகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதை கண்காணித்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement