ஒரே நாளில் 57 திருமணங்கள் குன்றத்துார் கோவிலில் நெரிசல்

குன்றத்துார்:குன்றத்துார் மலை மீது, சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இது. இங்கு, முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கும்.

இந்நிலையில், நேற்று வைகாசி மாதம் கடைசி முகூர்த்தம் என்பதால், இக்கோவிலில், 57 பதிவு திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்தவர்களால், கோவில் வளாகம் முழுதும் கூட்ட நெரிசல் அதிகரித்திருந்தது.

அதனால், திருமணத்திற்கு வந்தவர்களும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களும் அவதிக்குள்ளாகினர். மேலும், குன்றத்துாரில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் மண்டபங்களும் நிரம்பி வழிந்தன.

முருகன் கோவிலில் நடந்த திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்களால், குன்றத்துார் மலை அடிவாரத்தில் உள்ள சாலைகள், குன்றத்துார் நகர் பகுதியில் உள்ள சாலைகளில், மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement