வாய்க்காலில் கொட்டப்பட்ட 200 கிலோ சத்து மாத்திரை; சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை

திருப்பூர்: திருப்பூரில், வாய்க்கால் அருகே கொட்டப்பட்டிருந்த காலாவதியான, 200 கிலோ சத்து மாத்திரைகளை, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்டெடுத்து அப்புறப்படுத்தினர்.

திருப்பூர் கோவில் வழியிலிருந்து, அமராவதிபாளையம் செல்லும் ரோட்டில், பி.ஏ.பி., கிளை வாய்க்கால் அருகே, மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.

மருந்து, மாத்திரைகள் வாகனத்தில் எடுத்து வரப்பட்டு, கொட்டி, அவற்றுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. பாதி எரிந்த நிலையில் மருந்துக் கழிவுகள் குவியலாக கிடந்தன.

இதுகுறித்து, தகவலறிந்த மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அதிகாரிகள், வாய்க்கால் அருகே கொட்டப்பட்டிருந்த மருந்துகளை பார்வையிட்ட போது, அவை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக அரசால் சப்ளை செய்யப்படும் இரும்புச்சத்து, போலிக் ஆசிட் உள்ளிட்ட சத்து மாத்திரைகள் என்பது தெரிய வந்தது.

மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலாவதியாகும் மருந்து, மாத்திரைகளை, மருத்துவக்கழிவுகளை கையாளும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் விதி. கோவில் வழி - அமராவதிபாளையம் ரோட்டில், பி.ஏ.பி., கிளை வாய்க்கால் அருகே கொட்டப்பட்டிருந்த மாத்திரைகள் அனைத்தும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக வழங்கப்படும் சத்து மாத்திரைகள்.

கடந்த, 2024ல் காலாவதியான மாத்திரைகளைசாதாரண குப்பை போன்று நிலத்தில் கொட்டி தீ வைத்துள்ளனர். மொத்தம், 200 கிலோ காலாவதி மாத்திரைகளை கைப்பற்றி, மருத்துவக்கழிவு கையாளும் நிறுவன வாகனத்தை வரவழைத்து, ஏற்றி அனுப்பியுள்ளோம்.

அருகில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் விசாரித்த போது, 'தாங்கள் கொட்டவில்லை' என மறுத்துவிட்டனர். காலாவதி மாத்திரைகளை பொது இடத்தில் கொட்டியது தொடர்பாக, அது தொடர்பாக விசாரிக்க வகை செய்யும் வகையிலும், சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement