பவுஞ்சூரில் பழுதடைந்த பாலம் சீரமைக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் சாலையில், பழுதடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பகுதியில் இருந்து அணைக்கட்டு செல்லும் 12 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.

பச்சம்பாக்கம், செம்பூர், அணைக்கட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலை நடுவே, மதுராந்தகம் ஏரியின் உபரிநீர் செல்லும் பாலம் உள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம், முறையான பராமரிப்பு இல்லாததால், பாலத்தின் தடுப்புகள் சேதமடைந்துள்ளன. பாலம் அருகே மரம், செடிகள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. இதனால், பாலம் உறுதியிழந்து உள்ளது.

மழைக் காலத்தில் உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பாலம் தண்ணீரில் மூழ்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துறை சார்ந்த அதிகாரிகள் இந்த பாலத்தை ஆய்வு செய்து, புதரை அகற்றி, பாலத்தின் தடுப்புகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement