பட்டீஸ்வரம் கோவிலில் 150 ஆண்டுக்கு பின் தேரோட்டம் 

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் கோவிலில், உத்வசத்தின் போது கட்டுத்தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின், பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, 2021 - 2022 பட்ஜெட்டில், புதிய தேர் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேர் கட்டுமான பணிகள், 2023ல் துவங்கப்பட்டன. புதிய தேர் வடிவமைக்க கோவில் நிதி, 43.50 லட்சம் ரூபாய்; ஆணையர் பொது நிதி, 43.50 லட்சம் ரூபாய் என, 87 லட்சம் ரூபாய் நிதியில், இலுப்பை மரத்தில், 40 டன் எடையில், 19 அடி அகலம், 48 அடி உயரத்தில் தேர் வடிவமைக்கப்பட்டது.

கோவில் சன்னிதி தெருவில், 10 லட்சம் ரூபாயில் தேர் அலங்கார மண்டபம் கட்டப்பட்டு, மண்டபத்தை சுற்றி நான்கு பக்கங்களிலும், தேரை வெளியில் இருந்து மக்கள் பார்த்து ரசிக்க, பைபர் கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. தேர் வெள்ளோட்டம் மே 25ல் நடைபெற்றது. பின், வைகாசி விசாக விழா, மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. 150 ஆண்டுகளுக்கு பின், தேரோடும் வீதிகளில் தேர் ஓடியதால், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement