நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை!

1

புதுடில்லி: நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், கடந்த 10 ஆண்டுகளில் நக்சல் வன்முறை சம்பவங்கள் 53 சதவீதம் குறைந்துள்ளது. இது நக்சல் ஒழிப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.



நம் நாட்டில் நக்சல் இயக்கத்தின் செயல்பாட்டை, அடுத்த ஆண்டு மார்ச் 2026க்குள் முற்றிலும் ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்தந்த மாநில போலீஸ் படையுடன் இணைந்து, மத்திய பாதுகாப்பு படையினர் நக்சல் இயக்கத்தின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அழித்து வருகின்றனர்.


நக்சல் ஒழிப்பிற்கு எதிராக, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் நக்சல் வன்முறை சம்பவங்கள் 53 சதவீதம் குறைந்துள்ளது. இது நக்சல் ஒழிப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் நக்சலிசம் குறைந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.


2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் 16,463 நக்சல் வன்முறை சம்பவங்கள்
நடந்தன. இருப்பினும், 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை, இந்த எண்ணிக்கை 7,744 ஆக குறைந்துள்ளது. 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில், பாதுகாப்பு படையினர் 1,851 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 509ஆக குறைந்துள்ளது. இதேபோல், பொதுமக்கள் இறப்புகள் 70 சதவீதம் குறைந்துள்ளது.


2024ம் ஆண்டில் மட்டும் நக்சலைட்டுகள் 290 பேர் கொல்லப்பட்டனர். 1,090 பேர் கைது செய்யப்பட்டனர். 881 பேர் சரண் அடைந்தனர். கடந்த ஆண்டில் நக்சல் அமைப்பின் தலைவனாக இருந்த 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.47 கோடி வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. நக்கல் அமைப்பின் முக்கிய வேராக திகழ்ந்தவர்கள் கொல்லப்பட்டது மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.


2025ம் ஆண்டில் (இதுவரை) நக்சலைட்டுகள் 226 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 418 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 896 பேர் சரண் அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆக்ரோஷமான நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


நக்சல் இயக்கத்தின் தலைவனாக இருந்த தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரான பசவராஜூ என்பவரை பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக்கொன்றனர். ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்ட மற்றொரு உயர் தளபதியான சலபதி பிரதாப் ரெட்டி கொல்லப்பட்டான். இதனால், நக்சல் இயக்கத்தினர் தலைமை இன்றி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement