கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவு மார்க்சிஸ்ட் மேல்முறையீடு மார்க்சிஸ்ட் மேல்முறையீடு
மதுரை: அரசின் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
மதுரை அ.தி.மு.க., நிர்வாகி கதிரவன், 'பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு சில அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. அ.தி.மு.க.,வின் 53 வது ஆண்டு துவக்கவிழாவையொட்டி கொடிக் கம்பம் நட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,' என ஏற்கனவே மனு தாக்கல் செய்தார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின.
ஜன.27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாவாசிதேவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை மார்ச் 6ல் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். அது நிலுவையில் உள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்த சண்முகத்தின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு, 'மறுசீராய்வு மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்,' என உத்தரவிட்டு ஒத்திவைத்தது.