மீன் பிடிக்க ஏரிநீரை வெளியேற்றுவதால் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் இந்திரா நகர் அருகே, பொன்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி, இந்திரா நகரை சுற்றியுள்ள விளை நிலங்களில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர்.

தற்போது, இந்திரா நகரை சுற்றிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி இருப்பதால், ஏரி தண்ணீர் விவசாயத்திற்கு பயன்பாடு இன்றி, ஆடு, மாடுகளின் தாகத்தை தீர்க்க பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, ஏரி வறண்டு ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக சிலர், அந்த நீரையும் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.

இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் தாகம் தீர்க்க முடியாமல், தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வெளியேற்றுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை பராமரிப்போர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement