மத்திய அரசுக்கு பூஜ்ய மதிப்பெண் முதல்வர் சித்தராமையா மதிப்பீடு

மைசூரு: ''நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 11 ஆண்டு கால ஆட்சிக்கு பூஜ்ஜிய மதிப்பெண் வழங்குவேன்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நரேந்திர மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், யார் பயன் அடைந்தனர்? நாட்டுக்கு நல்ல நாள் வந்துவிட்டதா? ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக சொன்னார்.

விவசாயிகள் பிரச்னையை தீர்ப்பதாக சொன்னார்.

ஆனால், 11 ஆண்டுகளுக்கு பின்னரும் விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. அவர், திட்டங்களை மட்டுமே அறிவித்தார். ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை; பொய் சொல்கின்றனர்.

வாக்குறுதி திட்டங்கள், மாநிலத்தை திவாலாக்கும் என்றனர். ஆனால், எங்கள் வாக்குறுதித் திட்டங்களை நகலெடுத்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், புதுடில்லியில் அறிவித்தனர்.

கர்நாடகாவுக்கு 5,300 கோடி ரூபாய் விடுவிப்பதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிதி கிடைக்கவில்லை. 15வது நிதி ஆணையத்தின் கீழ், மாநிலங்களுக்கு, 11,495 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதையும் செயல்படுத்தவில்லை.

மாநிலத்துக்கு அநீதி ஏற்பட்டிருந்தாலும், பா.ஜ., தலைவர்கள் கேள்வி எழுப்பாமல், மாநில அரசுக்கு எதிராக, தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement