எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி எடுபடாது; உஷார் நிலையில் அ.தி.மு.க.,


தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி தான் அமையும் என்பதில் உறுதியாக இருப்பதாக, அ.தி.மு.க., தலைமைக்கு பா.ஜ., தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி கூறியதாவது:



தமிழகத்தில் மக்களுக்கு விரோதமாக செயல்படும் தி.மு.க., ஆட்சியை துரத்த வேண்டும் என்ற ஒற்றைக்கருத்தில் தான், அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் மீண்டும் கூட்டணியாக இணைந்துள்ளன. இருந்த போதும், தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி என்பதை பா.ஜ., மேலிடம் ஒப்புக்கொண்ட பின்பே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு சம்மதித்தார். அதன்பின்பே, தமிழகம் வந்த அமித் ஷாவை அவர் சந்தித்துப் பேசி, கூட்டணியை இறுதி செய்தார்.


இரு கட்சி தொண்டர்களும், அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக ஒருங்கிணைந்து பணியாற்ற துவங்கி விட்டனர். விரைவில், இரு கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசி, அடுத்தகட்ட அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.




இப்படி இரு கட்சிகளும் ஒருமித்து தேர்தலை நோக்கி பயணிப்பதை சீர்குலைக்கும் வகையில், எதிர்க்கட்சியினர் சில விஷயங்களை செய்கின்றனர். அதில் ஒன்றுதான், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என பா.ஜ., மேலிடத் தலைவர்கள் குறிப்பிடுவது போன்ற கருத்தைப் பரப்புவது. அப்படித்தான், நேற்று முன்தினம் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சை, திரித்து சொல்கின்றனர். அவர் எந்த இடத்திலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என குறிப்பிடவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்ற ரீதியிலேயே பேசினார். இதை பா.ஜ., மேலிட தலைவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு திரித்து பரப்பும் செய்திகளால், தமிழக மக்களும் கட்சியினரும் குழப்பத்துக்கு ஆளாக மாட்டார்கள். இதை, வரும் சட்டசபை தேர்தல் முடிவுகள் காட்டும். இவ்வாறு அவர் கூறினார்.





-நமது நிருபர்-

Advertisement