காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரையில் பூங்காவுடன் நடைபாதை அமைக்க முடிவு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள அல்லாபாத் ஏரி, 100 ஏக்கரில் அமைந்துள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரி முழுதும் சீமை கருவேல மரங்கள் காடு போல வளர்ந்திருந்தன. இந்த ஏரியை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகமும், எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பும் இணைந்து, அல்லாபாத் ஏரியை துார் வாரி சீரமைக்க முடிவு செய்தன. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணியை, கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

இதையடுத்து, மூன்று பொக்லைன் இயந்திரம் வாயிலாக சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து, எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:

அல்லாபாத் ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது; மீதமுள்ளவை நான்கு நாட்களில் அகற்றப்படும்.

இதையடுத்து, ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியும், தொடர்ந்து துார்வாரும் பணியும் துவக்கப்படும். மேலும், பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில், ஏரிக்கரையை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும், சிறுவர் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் முடிக்க திட்டமிட்டு, பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு கூறினர்.

Advertisement