டெண்டரில் விதிமீறல் தி.மு.க., கவுன்சிலர் புகார்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சீரமைப்பு டெண்டர் தொடர்பாக நேற்று புகார் அளித்துள்ளார்.
டெண்டர் விதிமுறை மீறி வழங்கப்பட்டிருப்பதாக அவரது புகார் மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மனு விபரம்:
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சீரமைப்பு செய்யும் பணிக்கான டெண்டர் ஒப்பந்தப்புள்ளி, 2024ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வரப்பெற்றது. இதற்கு, ஒரே ஒரு ஒப்பந்ததாரர் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தார்.
இந்த ஒப்பந்ததாரருக்கு தாசில்தாரால் வழங்கப்பட்ட சொத்து சான்று மதிப்பு 30 லட்ச ரூபாயாகும். பேருந்து நிலைய சீரமைப்பு பணி 80 லட்ச ரூபாயாகும்.
ஒப்பந்த பணியின் மதிப்பீட்டில், 50 சதவீதம், ஒப்பந்ததாரரின் சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.
ஆனால், ஒப்பந்ததாரர் சொத்து மதிப்பு 30 லட்சம் ரூபாய் உள்ள நிலையில், விதிகளுக்கு முரணாக மாநகராட்சி ஒப்புதல் இன்றி கமிஷனரால் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு பணி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்மானமும், கடந்த மார்ச் மாதம் மாநகராட்சி கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஒப்பந்ததாரருக்கு அவசர அவசரமாக பட்டியல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, பணி உத்தரவை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.