கோவில்களில் ஆக., 15 முதல் பிளாஸ்டிக் தடை

பெங்களூரு: பெங்களூரின் விதான் சவுதாவில், அறநிலையத்துறை முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் ராமலிங்கரெட்டி, நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:

ஹிந்து அறநிலையத்துறை கோவில்களில், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பகுதியாக்குவோம். ஆகஸ்ட் 15 முதல் கோவில்களில் குடிநீர் பாட்டில் உட்பட அனைத்து விதமான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்படும். உத்தரவை செயல்படுத்த இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கியிருந்தால், அவற்றை ஆகஸ்ட் 15 வரை பயன்படுத்தலாம். அதன் பின் பயன்படுத்த அனுமதி இருக்காது.

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள் பற்றிய முழுமையான தகவல்களை, மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கோவில் நிலங்களை அந்தந்த கோவிலின் பெயரில் பதிவு செய்ய, முடிவு செய்யப்பட்டது.

நகர்ப்புறங்களில் உள்ள அறநிலையத்துறை கோவில்களின் சொத்துகளை, தனித்தனியாக சர்வே நடத்த வேண்டும். கோவில்களின் பெயரில் பட்டா, சொத்து பத்திரங்கள் சரியாக இல்லையென்றால், மூன்று மாதங்களுக்குள் சர்வே செய்து, பதிவு செய்து கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆன்மிக பரிஷத் 31 மாவட்டங்களில் அமைக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. எட்டு மாவட்டங்களில் மட்டும் பரிஷத் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களின் தீர்த்த தலங்களில், கர்நாடக அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பவன்களில், உயர்தரமான வசதிகள் செய்யப்படும்.

திருப்பதி, துளஜாபுரா, பாண்டவபுரா உட்பட பல இடங்களில் கர்நாடக பவன்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு மாநிலங்களில் உள்ள பவன்களில், ஆன்லைன் வழியாக அறைகள் முன் பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்படும்.

ஹுலிகெம்மா, மலை மஹாதேஸ்வரா, ரேணுகா எல்லம்மா, சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. சாமுண்டீஸ்வரி மலையில் 11 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement