கேட்டால் கேட்ட வரம் தரும் 'சென்னகேசவர்'

அரளுகுப்பே என்பது துமகூரு மாவட்டம், திப்டூர் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். கர்நாடகாவை ஆட்சி செய்த ஹொய்சாளா வம்சத்தினர், கலைநயத்துடன் கூடிய பல கோவில்களை கட்டினர். அதே போன்று அரளுகுப்பேவில், சென்னகேசவர் கோவிலையும் கட்டினர். அற்புதமான கலை நயம் கொண்ட இக்கோவில், விஷ்ணுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோவிலாகும்.

கலைச்சிற்பங்கள்



கடந்த 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஹொய்சாளா மன்னர் விஷ்ணுவர்த்தனா கட்டியதாக வரலாறு கூறுகிறது. உட்புறம், வெளிப்புறம் கலை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அழகான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவின் சிலையும், அவரது துணைவியரான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியின் சிலைகளும் இங்குள்ளன. சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள கலை ஓவியங்கள், கோவிலின் அழகை அதிகரிக்கின்றன.

கோவில் வளாகத்தில், படிகள் வைத்துள்ள அற்புதமான கிணறு உள்ளது. கோவிலில் நடக்கும் பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு இந்த கிணற்றின் நீர் பயன்படுத்தப்படுகிறது. புனிதநீராக கருதப்படுகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரியில் கோவிலில் திருவிழா நடத்தப்படுகிறது. இதனை 'சென்னகேசவ பிரம்மோத்சவம்' என, அழைக்கப்படுகிறது. இதில் துமகூரு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

திருவிழா நடக்கும்போது, கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களை கவரும். உகாதி, தசரா உட்பட அனைத்து பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கும். தீபாவளி நாளில் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவர்.

நிம்மதி, அமைதி



அழகான இயற்கை சூழலில், கோவில் அமைந்துள்ளது. இங்கு வந்து சென்னகேசவரை தரிசித்தால், மனதுக்கு நிம்மதி, அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து, மனம் நொந்துள்ளவர்கள், இங்கு வந்து வேண்டினால், கஷ்டங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

Advertisement