11,000 மாம்பழத்தில் குமாரசுவாமிக்கு அபிஷேகம்

பெங்களூரு ஹனுமந்தநகர் உள்ள குமாரசுவாமி கோவில் எனும் பொன்மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடா கனவில் தோன்றிய முருகர், தனக்கு கோவில் கட்டும்படி கூறியுள்ளார். அதன்படி கோவில் உருவாக்கப்பட்டது.
முந்தைய காலத்தில் ஹனுமந்தநகர் 'நரஹரி குட்டா' என்று அழைக்கப்பட்டது. மாமரங்கள் நிறைந்த மையப்பகுதியில் இம்மலை இருந்தது. இதில் குமாரசுவாமி விக்ரஹத்தை கெம்பே கவுடா பிரதிஷ்டை செய்தார். இவரை சுப்பிரமண்யா, கார்த்திகேயா, முருகன் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
கெம்பே கவுடா காலத்தில் நான்கு துாண்களுக்கு மத்தியில் குமாரசுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதன் பின், 1901 ல் நரஹரி ராயா என்பவர் சிறிய அளவில் கோவில் கட்டினார். 1954ல் மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார், கோவிலுக்கு, 126 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்தார். 1956 ல் இக்கோவில் ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
வயதானவர்களும் ஏறும் வகையில், மலை அடிவாரத்தில் இருந்து கோவில் ராஜகோபுரம் வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மலை அடிவாரத்தில் பஞ்சமுக விநாயகர் சன்னிதி உள்ளது. பஞ்சமுக விநாயகர், தன் வாகனமான எலிக்கு பதிலாக சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பார். இங்கு சங்கட சதுர்த்தியன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இப்பூஜையை காண, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பெங்களூரில் கணபதி மந்திரம் வழிபாட்டு முறையை பின்பற்றும் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று.
கோவிலுக்கு செல்லும் வழியில் இடதுபுறம் 'ஸ்ரீ வித்பவா ஆதிசேஷ சுவாமி கோவில்' அமைந்து உள்ளது. இங்கு சுவாமியை தரிசித்து விட்டு, மீண்டும் படிக்கட்டு ஏறினால், வலது புறத்தில் சிறிதாக பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவை கடந்து சென்றால், 'கைலாச சம்பு சிவலிங்கேஸ்வரர் கோவில்' அமைந்து உள்ளது.
இவரை தரிசித்த பின், படிக்கட்டுகளில் ஏறினால், ராஜகோபுரத்தை சென்றடையலாம். ராஜகோபுரத்தை தாண்டியதும் பெரிய அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கத்தின் சுவரில், சுப்பிரமணியர் வரலாறு, சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன.
மூலஸ்தானத்தில் சிவலிங்கம் அருள்பாலிக்கிறார். இவருக்கு பின்புறம், நின்ற நிலையில் குமாரசுவாமி எழுந்தருளி உள்ளார். சிவனுக்கு பின்னால், குமாரசுவாமி நின்றிருப்பதால், இந்த இடத்திற்கு 'சக்தி அதிகம்' என்று கூறப்படுகிறது.
அதுபோன்று தாய் பார்வதி, சகோதரர் விநாயகர், நவக்கிரஹங்களுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது.
நவராத்திரி, திருப்படி திருவிழா, பரணி பிரம்மோத்சவம், கார்த்திகை தீபம் அன்று கோவில் விழாக்கோலமாக காணப்படும். ஆடி கிருத்திகை திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். ஜாதி, மொழி பேதமின்றி, லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் வருகை தருவர்.
வசந்த வைகாசி விசாகம் தினத்தன்று, குமாரசுவாமிக்கு - முருகருக்கு - மாம்பழம் பிடிக்கும் என்பதால், அவருக்கு 11,000 மாம்பழங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை தரிசிக்க பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருமண தோஷம், புத்திர பாக்கியம், உடலில் தோன்றும் புள்ளிகள் மறைய வேண்டி வரும் பக்தர்கள், உப்பு - வெல்லம் - மிளகு சேர்ந்து காணிக்கையாக செலுத்தினால், மூன்று மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும்.
புத்திர பாக்கியம் வேண்டி வரும் பக்தர்களுக்கு, பூஜிக்கப்பட்ட வெண்ணெய், குமாரசுவாமியின் வயிற்றில் தடவப்படும். இந்த வெண்ணெய், குழந்தை பாக்கியம் கேட்டு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் இதை அப்படியே சாப்பிட முடியாது. இதனை பிரெட்டில் தடவி சாப்பிடலாம்.
இக்கோவில் தினமும் காலை 6:30 முதல் மதியம் 12:30 மணி வரையிலும்; மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்
- நமது நிருபர் -.