வடிகால் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி : நைனார்மண்டபத்தில் வடிகால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி நகராட்சி மூலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 41 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நைனார்மண்டபம், சுதானா நகர், வ.உ.சி., தெரு, சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பூங்கா, துளுக்கனாத்தம்மன் நகர் பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி, நைனார்மண்டபம் வார்டில் 15 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறிய பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement