முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா? போலீசார் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் 'கெடு' பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதா என நீதிபதி கேள்வி
மதுரை : மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது, போலீசார் ஜூன் 12க்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
ஹிந்து முன்னணி மாநில செயலர் முத்துகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு, வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில், ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் எனும் மினியேச்சர்கள் மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட உள்ளன.
அவற்றின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்து பக்தர்களுக்கு விளக்கி, ஜூன் 10 முதல் 22 வரை தினமும் காலை 10:00 முதல், மதியம் 12:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க அனுமதி கோரி போலீசாருக்கு மனு அனுப்பினோம். போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்தார். அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க, பூஜைகள் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி, 'போலீஸ் தரப்பில் கூறப்படும் ஆட்சேபனைகள் ஏற்புடையதல்ல.
பாதுகாப்பு தருவதில் போலீசாருக்கு எத்தகைய சிரமம் உள்ளது? அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது; பக்தர்களுக்கு வழங்க முடியாதா' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், 'சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது; விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது.
'ஐந்து லட்சம் பேருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்? மாநாட்டில் பங்கேற்கும் வி.ஐ.பி.,கள் குறித்த கேள்விக்கு பதில் இல்லை. 20,000 பேர் பங்கேற்பதாக கூறுகின்றனர். தெளிவற்ற பதிலால் பாதுகாப்பு அளிப்பது குறித்து முடிவு செய்ய இயலவில்லை. மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு நிலுவையில் உள்ளது' என வாதிட்டார்.
இதையடுத்து, 'போலீஸ் தரப்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு மனுதாரர் தரப்பில் விளக்கமளிக்க வேண்டும். மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது ஜூன் 12க்குள் போலீசார் முடிவெடுக்க வேண்டும். மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை தொடரலாம். பூஜைகள் நடத்தக்கூடாது.
'விசாரணையை ஜூன் 13க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!