கூட்டணி கட்சிகளோடு இணக்கமாக பணியாற்ற அமித் ஷா 'அட்வைஸ்'

4



அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை, முழு வேகத்தில் தி.மு.க., துவக்கி விட்டது. அதேபோல, அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பா.ஜ.,வும் துவக்க வேண்டும் என்பதற்காக, மதுரையில் கட்சியின் மையக்குழு கூட்டம், நேற்று முன்தினம் கூட்டப்பட்டது.

கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளதாவது:



தமிழகத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.,வுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் இல்லாத நிலை இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், திராவிட இயக்கங்களைப் போல, கட்சியை அடிமட்ட அளவில் கொண்டு செல்லாததுதான்.

அதிருப்தி



மத்தியில் நம் ஆட்சி தான் இருக்கிறது. 11 ஆண்டுகளில் ஏராளமான மக்கள்நல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். ஆனால், அந்த திட்டங்கள் குறித்த விபரங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.


அத்தகைய திட்டங்களை நாம் தான் செய்திருக்கிறோம் என்ற தகவலும் போய் சேரவில்லை. அந்தப் பணிகளை முழுமையாக செய்தாலே, மக்களுக்கு பா.ஜ., மீது தனித்த ஈர்ப்பு வரும்.


சிலருக்கு கட்சியின் மீதும், தலைமை மீதும் அதிருப்தி இருப்பதாக சொல்கின்றனர். எல்லாரையும், எல்லா நேரங்களிலும் திருப்திபடுத்த முடியாது. கட்சி நடவடிக்கைகளில் முன்னே, பின்னே இருக்கத்தான் செய்யும்.



அதற்காக, இனிமேல் நான் அமைதியாக இருக்கப் போகிறேன் என்று சொல்லி, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கினால், சம்பந்தப்பட்ட தனி நபருக்குத்தான் பாதிப்பு; கட்சிக்கு அல்ல. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவி, மரியாதை எல்லாம் தேடி வரும்.


கட்சி வளரும்போது, கூடவே கோஷ்டிகளும் உருவாகத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. தலைவர்கள் உருவாகும்போது, கோஷ்டிகளும் தானாகவே உருவாகத்தான் செய்யும். கோஷ்டி என்பதுகூட, கட்சி வளர்ச்சிக்கு ஒரு விதத்தில் நல்லதுதான்.


ஆரோக்கியமான நிலையில் கோஷ்டியாக செயல்படுவோர், கட்சி வளர்ச்சிக்காக தனித்தனியாக பாடுபடும்போது, கட்சி வேகமாக வளரும். கோஷ்டியாக செயல்படுகிறோம் என்று சொல்லி, அடுத்தவரை அழிக்க நினைத்தால், நினைப்பவர்தான் அழிந்து போவர்.


எந்தவொரு விஷயமும் யாருக்கும் தெரியாது என நினைத்து, யாரும் செயல்படக்கூடாது. டில்லிக்கு எல்லா தகவல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன.


அதனால்தான், சில விஷயங்கள் மேலிடத்தில் இருந்து அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும்போது, கீழே இருப்பவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது.


தலைவர்கள், நிர்வாகி கள், தொண்டர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்துள்ள இயக்கம் தான் பா.ஜ., அதனால், இங்கு தனிமனித போற்றுதலுக்கு வாய்ப்பே இல்லை. கட்சி இன்னும் பல வளர்ச்சிகளை கண்டாக வேண்டும். அதற்கு, ஒவ்வொருவரின் உழைப்பும்
அவசியம்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்பது போல, கட்சியில் பதவி, முக்கியத்துவம் எல்லாமே கிடைக்கும்.

வாக்குறுதி



தமிழகத்தைப் பொறுத்தவரை, வலுவான கூட்டணியை கட்டமைத்தால் தான், தி.மு.க.,வை வீழ்த்த முடியும். அதற்கு கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்க்க வேண்டும்.



அதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. கூட்டணி கட்சிகளோடு ஒருநாளும் முரண்கள் வரக்கூடாது. இணக்கமாக களப்பணியாற்ற வேண்டும்.


அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைத்திருக்கிறோம். அக்கட்சியிடம் இருந்து, நாம் வெல்லக்கூடிய தொகுதிகளாகப் பார்த்து, ஒதுக்கீடு பெற வேண்டும்.


ஓட்டு வங்கி உயர்ந்து விட்டது என்ற காரணத்தைச் சொல்லி, கடுமையான தொகுதிகளை கேட்டுப் பெற்று, தோல்வி அடையக் கூடாது. நம்மைப் பொறுத்தவரை, வெற்றி ஒன்றுதான் ஒரே இலக்கு.

அ.ம.மு.க., தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர், நம் கூட்டணியில் தான் உள்ளனர். அவர்களுக்கு, பா.ஜ., தரப்பில் இருந்து 'சீட்' ஒதுக்கீடு செய்வது குறித்து யோசித்து வருகிறோம்.



தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யத் தவறிய அனைத்து வாக்குறுதிகளையும் கணக்கெடுங்கள்; அதை மக்களிடம் கொண்டு சென்று பூதாகரப்படுத்துங்கள்.


யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பயமின்றி பணியாற்ற வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன். எப்போது கூப்பிட்டாலும் சரி; எத்தனை முறை கூப்பிட்டாலும் சரி; தமிழகத்துக்கு ஓடோடி வருவேன்.


வரும் 2026ல் பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளதாக தெரிகிறது.

பா.ஜ.,வுக்கு பலன் இல்லை'

'த.வெ.க., தலைவர் விஜய், கூட்டணியில் சேர்ந்தாலும், அது பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்காது' என, அமித் ஷா, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். மதுரையில் கட்சியின் மையக்குழு கூட்டத்தில் பேசிய அவர், 'பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி இயற்கையானது. இதை, தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். இன்னும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணி பலப்படுத்தப்படும். கூட்டணியில் இணைவது தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜயுடன் பேச்சு நடத்தப்படுகிறது. அவர், நம் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு குறைவு. அப்படியே, நம் கூட்டணியில் விஜய் சேர்ந்தாலும், அது பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்காது. விஜய்க்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள்தான் அதிகம் கிடைக்கும். அந்த ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைக்க வாய்ப்பில்லை' என பேசியதாக தெரிகிறது.






- நமது நிருபர் -

Advertisement