அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த போக்குவரத்து கழக மேலாளர் 'சஸ்பெண்ட்'
மதுரை: அரசு பஸ்சை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்த கோவை தாராபுரம் கிளை பஸ் டிரைவரை, செருப்பால் அடித்த பஸ் ஸ்டாண்ட் உதவி மேலாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கோவை தாராபுரத்தில் இருந்து மதுரை ஆரப்பாளையத்திற்கு, நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, அரசு பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்டி வந்தார். ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு முன்புறம் உள்ள வளைவில் பயணியரை இறக்கிவிட்டு திரும்பிய போது, அங்கு காத்திருந்த கோவை பயணியரை பஸ்சை நிறுத்தி ஏற்றினார்.
பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு முன்பாகவே பஸ் நிறைந்து விட்டதால், நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க கணேசன் சென்றார்.
ஏற்கனவே, இரு அரசு பஸ்களில் பயணியர் கூட்டம் நிறைந்திருந்ததால், 'உடனடியாக தாராபுரம் கிளை பஸ்சை எடுக்க முடியாது' என, தெரிவித்த நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து, கணேசனிடம் இருந்த 'இன்வாய்ஸ்' ஆவணங்களை வாங்கியபடி, 'உங்களுக்கு மெமோ தர வேண்டும்' என்றார்.
டிரைவருக்காக காத்திருந்த பயணியர், 'டிரைவர் மேல் தவறு இல்லை' என தெரிவித்ததும் ஆத்திரமடைந்த மாரிமுத்து, கணேசனை தகாத வார்த்தைகளால் பேசியபடி செருப்பால் சரமாரியாக அடித்தார்.
'டிரைவரை அடிச்சுட்டாங்க' என கத்திக் கொண்டே டிப்போ உள்ளே இருந்து வெளியே வந்த கணேசனை, மாரிமுத்து மீண்டும் தாக்கினார். இதை கவனித்த பயணியர், சக டிரைவர்கள் அவரை தடுத்து கடும் வாக்குவாதம் செய்தனர்.
மாரிமுத்துவை மண்டல போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன் 'சஸ்பெண்ட்' செய்தார். மாரிமுத்து மீது நடவடிக்கை கோரி, போக்குவரத்து கழக 13 கிளைகளின் முன் சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், தன் மீது நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்து, மாரிமுத்து வீடியோ வெளியிட்டார்.
டிரைவரை மாரிமுத்து செருப்பால் அடித்த வீடியோவும், அவர் மன்னிப்பு கோரும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன